Saturday, March 28, 2009

தேன் மருத்துவம்

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது.

சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது.

கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது.

மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும்.

தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும்.

எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது.

தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும்.

அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும்.


இரத்த சோகையை அகற்ற:
நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன.

தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன்.

தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும்.

தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது.

சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம்.

தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு.

தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது.

தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள்.

டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது.

முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள்.


தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: 
  • சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். 
  • மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். 
  • ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.


கண் பார்வைக்கு

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

ஆஸ்துமா

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்

இரத்த கொதிப்பு

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும்.  இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.

இதயத்திற்கு டானிக்

அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.



தேனை உட்கொள்ளும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:


1. தேனை சூடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
2. தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
3. வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
4. தேனை மழை நீர், கடுகு, நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.


தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும்.  நஞ்சு பொதுவாக கார மற்றும் உஷ்ண குணங்களையே கொண்டிருக்கும்.  ஆகவே தேனை கார மற்றும் சூடான உணவு பொருட்களுடன் கலக்கும் போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் சாத்தியக்கூறு உள்ளது.

Friday, March 20, 2009

நிராகரிக்கப்படும் என்ற அச்சமின்றி நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்!

நீங்கள் விரும்புவதைக் கேட்டுப் பெறக்கூடிய திறமையும், நீங்கள் விரும்புவதைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் இந்த உலகம் உங்களுக்கு வேண்டியவற்றைப் பெற்றுத் தரும். சில மனிதர்கள் உண்மையிலேயே கேட்பதிலும், அவர்கள் விரும்புவதைப் பெறுவதிலும் புத்திசாலிகள். ஏனென்றால் அவர்களால் அது முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதிர்ஷ்டத்திற்கு இதில் சிறு பங்குதான் என்றாலும், மற்றவர்கள் இவர்களை மிகவும் அதிர்ஷ்டசாலிகளாகத்தான் பார்ப்பார்கள்.

சுய-பரிணாமத்திற்கான உபகரணங்களில் மிக முக்கியமானது தான் விரும்புவதைக் கேட்கக்கூடிய ஆற்றல். பலர் தாங்கள் விரும்பும் அல்லது தங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை எப்படி கேட்பது என்று தெரியாததால் பின் தங்கி விட்டார்கள். அவர்கள் தகவல்கள், வழி, உதவி, புதிய கண்டுபிடிப்புக்கான பண உதவி மற்றும் ஊதிய உயர்வு மூலம் சிறந்த வாழ்க்கை ஆகியவற்றை கேட்டுப் பெற பயந்தவர்கள். அவர்கள் முட்டாள்களாகவோ, தேவை உடையவர்களாகவோ பார்க்கப்பட்டு விடுவோமோ என்ற உணர்வால் தடுக்கப்பட்டவர்கள். ஆனால் நீங்கள் விரும்புவது ஒரு முத்தம், அரவணைப்பு, அடுத்தவரின் பொன்னான நேரம், கவனிப்பு மற்றும் நம்பிக்கையானவர் என்று எதுவாக இருந்தாலும், தேவையென்று நீங்கள் நினைத்தால் கேளுங்கள்.

எது எப்படி இருந்தாலும், கேட்க வேண்டும் என்ற நிலை வரும்போது நம்முள் எழும் மிகப் பெரிய கேள்வி நீ கேட்பாயா?! என்பதுதான். மற்றவர்கள் நம்மைப் பற்றி இப்படித்தான் நினைத்து வைத்திருப்பர் என்று ஒரு பொழுதும் முடிவு செய்யாதீர்கள். அவர்கள் உங்கள் எண்ணங்களை தானாகப் படித்து வேண்டியதைக் கொடுப்பார்கள் என்றும் உறுதி செய்யாதீர்கள். எப்பொழுதும் நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை நீங்களாக அடுத்தவருக்குச் சொல்லும் வரை எவராலும் சரியாகக் கணிக்க முடியாது. நீங்கள் ஆசைப்பட்டதைக் கேட்பதற்கு அச்சப்படுவது உங்கள் வாழ்க்கை மற்றும் கனவுகளின் மூலம் நீங்கள் அடையக்கூடியச் சிறந்தவற்றை தவிர்த்ததாகிவிடும்.

சிறுபிள்ளைதனமோ, முட்டாளோ அல்லது தேவையுடையவரோ நாம் என்ற பய உணர்வு கேட்பதில் இருந்து நம்மைத் திசை திருப்பும். அடுத்ததாக நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற பயம் நாம் விரும்புவதைக் கேட்பதற்கானத் தைரியத்தையும் தராது. நம்மில் பலருக்கு நிராகரிப்பின் மேல் ஒரு மரணபயம். இந்த நிராகரிப்பின் மீதான மரணபீதி என்பது நாம் உருவாக்கி நமக்கே கொடுத்துக் கொண்ட ஒன்றுதான்.

இது போதாதென்று அடுத்து வருவது "இது மட்டும் இருந்திருந்தால்" என்ற பகுதி. நான் மட்டும் 20 பவுண்டு எடைக் குறைவாக இருந்திருந்தால்; என் தலைமுடியின் நிறம் மட்டும் இன்னும் பளபளப்பாக இருந்திருந்தால்; நான் மட்டும் உயரத்தில் 510 இருந்திருந்தால், என்னிடம் மட்டும் சிறந்த மகிழ்வுந்து, சிறந்த மனை இருந்திருந்தால்; நான் மட்டும் ஊரின் அடுத்த பகுதியில் வசித்திருந்தால்.... அவன்/அவள் என்னுடன் இன்றொரு நாள் வெளியில் வந்திருப்பார்கள். ஆதலால் இப்பொழுது நான் குண்டாக, விரும்பத்தகாத, ஏழ்மையான, தவறான தலைமுடி நிறத்துடன் அல்லது ஊரின் தவறான பகுதியில் வசிப்பவர் என்ற முடிவுக்கு வருகிறோம். அது ஒரு நம்பிக்கையாக உருவாகி நமது விருப்பமெல்லாமே

நாம் கேட்பவை நிராகரிக்கப்பட்டுவிடும் என்கிற பயத்தை நமக்குள் உருவாக்கி விடுகிறது.. இறுதியில் இல்லை ன்ற பதில் நாம் நம்மைப் பற்றி முதலில் நம்பியதற்கு வெறும் சாட்சியாகத்தான் வருகிறது.

ஒரு பொருளுக்கு ஆசைப்படும்பொழுது அது கிடைக்காதென்று முடிவு செய்யாமல், அதைப் பெறுவதற்கான அனைத்து நல்ல குணாதிசயங்களும் நமக்குள்ளது என்பதை நம்புவது மிக முக்கியம்.நீங்கள் கேட்கும் நபர் இல்லையென்று சொன்னாலென்ன? எதை இழந்தீர்கள், எதுவும் இல்லை. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் தொடர்ந்து உறுதியாக மீண்டும் கேளுங்கள்.

நீங்கள் விரும்புவதைக் கேட்கத் தயாராக இருங்கள். அது ஊதிய உயர்வாகவோ, விடுமுறையாகவோ, நீண்ட உணவு இடைவேளையாகவோ, தள்ளுபடியாகவோ மற்றும் ஒப்பந்தமாகவோ இருக்கலாம். தாங்கள் விருப்பப்படுவது எதுவாக இருந்தாலும் கேட்கத் தொடங்குங்கள் மற்றும் பெறுவீர்கள் என்று எதிர்பாருங்கள். மேலும், மீண்டும் கேட்கத் தயாராகுங்கள் கிடைக்கும் வரை.

தங்களுக்குள் தாங்கள் கேட்கும் இந்த மூன்று கேள்விகள் ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.

நான் விரும்புவது எனக்கு கிடைக்கப்பெற்றால்:

நான் எப்படி இருப்பேன்?

நான் அதை எப்படி உணருவேன்?

நான் அதனுடன் என்ன செய்யப் போகிறேன்?

அதே தருணத்தில், சில நேரங்களில் தாங்கள் விரும்புவது கிடைக்காமலும் போகலாம். ஆனால் உண்மையில், விரும்புவதைக் கேட்பது உங்களுக்குச் சிறந்த சந்தர்ப்பங்களையும் நீங்கள் விருப்பப்படுவது கிடைக்கும்வரை மீண்டும் மீண்டும் கேட்பதற்கும் கற்றுத் தரும்.

வித்தியாசமான அணுகுமுறை

மிகவும் பரபரப்பானதொரு காலைப் பொழுதில் கண்ணில்லாத சிறுவன் ஒருவன் நடைபாதையில் நடந்து வந்தான். தான் கொண்டு வந்த பலகையில், "எனக்குக் கண்கள் இல்லை. அதனால் எனக்கு உதவுங்கள்" என்று எழுதி நடைபாதையில் போய் வரும் அனைவரும் பார்க்கும் வகையில் வைத்தான். அவன் மேல் பரிதாபம் கொண்ட சிலர் அவன் முன்னிருந்த விரிப்பில் சில்லறைகள் இட்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற மனிதன் தன்னிடமிருந்த பணத்தை விரிப்பிலிட்டான். அச்சிறுவன் வைத்திருந்த பலகையின் மறுபுறம் வேறு சில வார்த்தைகள் எழுதி அனைவரும் பார்க்கும் விதமாக வைத்தான். பிறகு அந்த வழியே சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவ்வழியே சென்ற அனைவரும் சிறுவனின் விரிப்பில் பணமிட ஆரம்பித்தனர். தான் எழுதிய வார்த்தைகள் எந்த அளவு சிறுவனுக்கு உதவியது என்றறிய மாலையில் மீண்டும் அவ்வழியே வந்தான் அம்மனிதன். பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு மற்ற புலன்களனைத்தும் மிகவும் சக்தி வாய்ந்ததாகயிருக்கும். அம்மனிதனின் காலடிகள் மூலம் அவன் வருகையை அறிந்து கொண்டான் சிறுவன்.

"காலையில் நீங்கள் எதையோ பலகையில் எழுதிய பிறகுதான் அனைவரும் எனக்கு உதவினார்கள். அனைவரும் உதவும் வகையில் அப்படி அதில் என்ன எழுதினீர்கள்?" என்று கேட்டான். அதற்கு அவன், "நீ எழுதியதையேதான் நானும் எழுதினேன். ஆனால் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கிறேன். பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை" என்றான். அம்மனிதன் எழுதியது,

"இன்றைய தினம் மிகவும் அருமையாக விடிந்துள்ளது.
ஆனபோதும் என்னால் அதை ரசிக்க முடியவில்லை"

சிறுவனும், மனிதனும் சொல்லும் விஷயம் என்னவோ ஒன்றுதான். சிறுவனுக்கு பார்வையில்லை என்பதையேதான் இருவரும் சொல்கிறார்கள். ஆனால் அதைச் சொல்லும் விதத்தில் வேறுபடுகிறார்கள். சிறுவன் முதலில் மற்றவர்களை உதவிடுமாறு எழுதியிருந்தான். ஆனால், அம்மனிதன் எழுதியதோ, மற்றவர்களால் பார்த்து ரசிக்க முடிந்த ஒன்றைப் பார்வையில்லாத காரணத்தால் சிறுவனால் ரசிக்க முடியவில்லை என்பதாக இருந்தது.

நீங்கள் சொல்ல வருவது அனைவராலும் ஒப்புக்கொள்ளக் கூடியதாக இருக்கலாம். ஆனால் சொல்லும் விதத்தில் சொல்வதால் மட்டுமே உரிய பலனை அடைவீர்கள்.

இதன் மூலம் நாம் அறிய வரும் முத்தான மூன்று கருத்துக்கள் :

* மற்றவர்களிடம் இல்லாத பல அரிய விஷயங்களை நமக்களித்த கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* உங்களால் இயன்ற வரையில் மற்றவர்களுக்கு உதவிடுங்கள்.
* எதையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் அணுகிடுங்கள். ஆக்கப்பூர்வமாக சிந்தித்திடுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காண வழிகள் பல உண்டு என்று காண்பீர்கள்.

நன்றி : நிலசாரல்

நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. அதேபோல் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறார் டான்யல் ஹோலிஸ்டர்.

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.
* நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.
* மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.
* மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.
* உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
* அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள்.
* அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது.
* நியாயத்திற்காக போராடுங்கள்.
* வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள்.
* சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு.
* பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள்.
* உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள்.
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.
* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள்.
* சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில்.
* நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள்.
* அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.
* கடந்த கால வாழ்க்கையை மறந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
* எந்த ஓரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.
* உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திடுங்கள்
* பண்புடன் வாழுங்கள்.
* துயரமான நாள்களில் கடவுளை நம்புங்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவுமில்லை.

Tuesday, March 10, 2009

ஒவ்வாமையைப் போக்குவது எப்படி?

நம் அன்றாட வாழ்வில் அனைவரும் ஒரு முறையேனும் உபயோகிக்கும் வார்த்தை "ஒவ்வாமை" (Allergy). இது ஏற்படுவதற்கான காரணங்களையும் அதைப் போக்குவதற்கான சில வழிமுறைகளையும் நாம் இங்கு காண்போமா?

எப்படி ஏற்படுகிறது?

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை ஆங்கிலத்தில் allergen (or) antigen என்றழைக்கின்றனர். இந்த அலர்ஜென் தோல் மூலமாக நேரடியாகவோ, இதர உடல் உறுப்புகளின் மூலமாகவோ உடம்பினுள் சென்றடைந்ததும், இரத்த ஓட்டத்தின் மூலமாக திசுக்களைச் சென்றடையும். நம் உடம்பின் எந்த பாகமும் ஒவ்வாமையினால் தாக்கப்படலாம்.

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியப் பொருட்கள் :

தூசு, மகரந்தம், அழகு சாதனப் பொருட்கள், விலங்குகளின் முடி, விஷச் செடிகள், மருந்து வகைகள், தடுப்பூசிகள் மற்றும் பலவகையான உணவுப் பொருட்கள். உணவுப் பொருட்களில் தோடம் பழங்கள் (oranges), செம்புற்று பழங்கள் (Strawberries), பால், முட்டை, கோதுமை, மீன், கடல் வாழ் உணவு வகைகள், இனிப்பு வகைகள் மற்றும் தக்காளி அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியவை. வெப்பம், குளிர், சூரிய ஒளி போன்ற இயற்கை் சூழ்நிலைகளும் ஒவ்வாமைக்குக் காரணிகளாக அமைகின்றன.
சுத்திகரிக்கப்பட்ட உணவுவகைகள் அதிகமாக உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். அவ்வாறு சுத்திகரிக்கப்படும் பொருட்கள் பலவேறு ரசாயனங்கள் மிகுந்து காணப்படுவதே இதன் காரணமாகும்.

உணர்ச்சி வசப்படுதல் மற்றும் உளவியல் அழுத்தம் காரணங்களாலும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.


ஒவ்வாமையினால் ஏற்படும் தொல்லைகள் :

தலைவலி, மைக்ரெய்ன் (migraine), தலைசுற்றல், நமைச்சல், மனஅழுத்தம், மனக்கவலை, காய்ச்சல், சளி, வயிற்றுபோக்கு, வாந்தி, முகம் மற்றும் கண்கள் வீங்குதல், ஆஸ்துமா போன்றவை ஒவ்வாமை ஏற்பட்டதற்கான அறிகுறிகள்.

ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு விதமாக தாக்கும் தன்மை கொண்டவை.



ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

1. 500 ml கேரட் சாறு மட்டுமாக அல்லது கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி, இம்மூன்று காய்கறிச் சாறுகளின்கலவை ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த உதவும்
இம்மூன்று காய்கறிச் சாறுக அளவு விகிதம் கீழ்கண்டவாறு அமையவேண்டும் :
500 ml - கேரட் சாறு
100 ml - பீட்ரூட் சாறு
100 ml - வெள்ளரிக்காய் சாறு

தினமும் ஒருமுறை கேரட் சாறோ அல்லது மூன்று காய்கறிகளின் சாறின் கலவையையோ அருந்துவதன் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாம்.

பலவகையான உணவுப் பொருட்கள், அஜீரணக் கோளாறு, ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் உட்கொள்ளுதல் மூலமாகப் போக்கலாம். வாழைப்பழத்தின் மூலமாக ஒவ்வாமைக்குள்ளாவோர் இதனைத்தவிர்ப்பது நன்று!

2. வைட்டமின்கள் A, C, E சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்கள் மூலம் ஒவ்வாமையைப் போக்கலாமென்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள்.

ஆப்பிள், பப்பாளி, தர்பூசணி, அன்னாசி, மாம்பழம், வாழைப்பழம், கேரட், காலிப்ளவர், சோளம், வெள்ளரி, வெங்காயம், பச்சைப்பட்டாணி, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் Cநிறைந்துள்ளது.

வைட்டமின் A நிறைந்துள்ளவை தர்பூசணி, மாம்பழம், கேரட், பச்சைப்பட்டாணி, பீட்ருட் மற்றும் பூசணிக்காய் ஆகும்.

3. நிறைய குடிநீர் அருந்துதல் மூலம் மற்றும் ரசாயன முறைகளில் பக்குவப்படுத்தப்படாத உணவுப் பொருட்களை உட்கொள்ளுதல் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

4. நாள்தோறும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் மற்றும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் நம் உடலில் படுவதன் மூலமாகவும் ஒவ்வாமையைப் போக்கலாம்.

5. B-complex மாத்திரைகளை உட்கொள்ளுதல் மூலமாகவும்
ஒவ்வாமையைத்தவிர்க்கலாம். B-complex மாத்திரைகள் நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

6. நம் வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகப் பராமரிப்பதன் மூலமும் ஒவ்வாமை ஏற்படுதலைத் தவிர்க்கலாம்.

7. பூண்டு ஆஸ்துமாவினால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்தாக உதவுகின்றது. ஆஸ்துமாவின் ஆரம்ப நாட்களில் அவதிப்படுபவர்கள், பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்தப்பின் அருந்துவதால் நல்ல நிவாரணம் பெற முடியும்.

8. பால் அல்லது குடிநீருடனோ அல்லது தனியாகவோ தேனை அருந்துவதால் சுவாசம் சீர்பட்டு ஒவ்வாமையினால் ஏற்படும் ஆஸ்துமா கோளாறு நீங்கும்.

9. வெளியில் சென்று வந்தவுடன் நன்றாக குளிப்பதால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தவிர்க்கலாம்.

****

Right To Emergancy Care

ஒருவர் விபத்திற்குள்ளாகி மருத்துவ முதலுதவி தேவைப்படும் நிலையில் இருக்கும்போது முதலுதவி தர மறுத்தும், காவல் துறை சம்பிரதாயங்களுக்காகவும் கட்டாயப்படுத்தும் மருத்துவமனைகளுக்கெதிரான
"அவசர சிகிச்சைகளுக்கான உரிமை" - உச்சநீதிமன்ற ஆணையின் மூலம் நிலை நிறுத்தப் படுகிறது!

நாம் அந்நபரை அருகிலிருக்கும் எந்த ஒரு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றாலே போதும்! முதலுதவி மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தல் போன்றவை அம்மருத்துவமனைகளுக்கே உரிய கடமை என்று வலியுறுத்தப் படுகிறது!



எதுவாகவேண்டுமோ அதுவாக மாறிவிடு

எல்லோரும் மற்றவர்களைப் பார்த்து உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்கத் துடிப்பார்கள். அது மட்டுமல்ல பலர், வெற்றி பெற்றவர்களைப் பார்த்து, அவரின் வெற்றியின் ரகசியம் என்னவாக இருக்கும்? யாரோ பலே பார்ட்டியின் சப்போர்ட் இருக்கும் போல… இல்லேன்னா எப்படி வெற்றியை இவ்வளவு எளிதில் அடைந்து இருக்க முடியும்’ என்று தலையைப் பிய்த்துக் கொள்வதும் உண்டு. இதோ அந்த ரகசியம் உங்களுக்கு மட்டும்!!

ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.

அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.

எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.

”என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.

அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.

மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.

”மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார். காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !

மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.

“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.

ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.

தொழுகையின் போதும், நாம் ஆண்டவனோடு ஒன்றிப்போக வேண்டும். அப்படிச் செய்தால் நம் துஆ நிறைவேறும். வெறும் முணுமுணுத்தால் போதாது. அதோடு ஒன்றிப் போய் பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டு வேலையாக இருந்தாலும், அலுவலக வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

நன்றி :

இனிய திசைகள்